

ரியாத்: உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத் தரவுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களும் அப்கேக் வளாகத்திலிருந்து அடர்ந்த புகை மேகங்கள் எழும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை கையாளும் இந்த ஆலை, சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.
ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஆயுதமேந்திய குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகச் சவூதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், தலைநகர் ரியாத் உட்பட பல பகுதிகளை நோக்கிய வந்த பிற ட்ரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ள சவூதி அரசு, தன் மீதான தாக்குதலுக்குத் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்க அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உள்ளதாக எச்சரித்துள்ளது.
அதேவேளையில், ஏமனின் ஹவுதி அமைப்பும் சவூதியின் எண்ணெய் போக்குவரத்து வழிகளைக் குறிவைத்துத் புதிய தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சவூதி அரேபியா தனது கிழக்கு மாகாணங்களிலிருந்து செங்கடலில் உள்ள‘யான்பு துறைமுகத்திற்கு எண்ணெய் அனுப்பக் கிழக்கு-மேற்கு குழாய்களைப் பயன்படுத்தி வந்தது. இந்த வழித்தடத்தையே ஹவுதி அமைப்பினர் குறிவைத்துள்ளனர். சவூதி விமானப்படை யேமனிலுள்ள ஹவுதி இலக்குகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.