

சான் பிரான்சிஸ்கோ: தங்கள் செயலியின் சேவையை முழுவதுமாக முடக்கும் முயற்சியை ரஷ்யா மேற்கொண்டதாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு ஆன்லைன் சேவைகளை ரஷ்ய மக்கள் பயன்படுத்துவதை வலியுறுத்தும் விதமாக அந்நாட்டு அரசு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் தள சேவை நிறுவனங்கள் தங்கள் மக்களின் தரவுகள் உள்நாட்டில் சேமிக்கப்பட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ரஷ்யா மீது வாட்ஸ்அப் தளம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
வாட்ஸ்அப் தளத்தை முழுவதுமாக முடக்கும் முயற்சியை ரஷ்யா மேற்கொண்டது. இதன் மூலம் அரசின் ‘மேக்ஸ்’ என செயலியை பயன்படுத்த ரஷ்ய மக்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால், 100 மில்லியன் பயனர்களை பாதுகாப்பான கம்யூனிகேஷன் தளத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பயனர்களை இணைப்பில் வைக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 10-ம் தேதி அன்று தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு இணங்காத டெலிகிராம் தளத்தை படிப்படியாக தடை செய்யும் முயற்சியை ரஷ்யாவின் இணைய சேவை பிரிவு மேற்கொள்வோம் என எச்சரித்த சூழலில் வாட்ஸ்அப் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது.