

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்' அமைப்பின் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 3 இந்திய வம்சாவளி நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் கடுமையான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அந்நாட்டின் பணவியல் கொள்கைகளை முழுமையாக சீரமைக்கவும் புதிய சீர்திருத்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக, ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய தலைவரான கெவின் வார்ஷ் 5 புதிய உயர்நிலை பணிக்குழுக்களை அறிவித்துள்ளார். இக்குழுக்களில்தான் ரகுராம் ராஜன், டெல்லியில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ராஜ் செட்டி மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஆஷா சர்மா ஆகிய 3 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, அமெரிக்க மத்திய வங்கியின் நிதிநிலை அறிக்கை சுமார் 9 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இதனை முறைப்படுத்தி, பணவீக்கத்தை நீண்ட கால இலக்கிற்குள் கொண்டுவர ஃபெடரல் ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது. இந்நிலையில், வங்கியின் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி, புதிய சிந்தனைகளைப் புகுத்தும் நோக்கில் உலகின் மிகச்சிறந்த 15 நிபுணர்களைக் கொண்டு இந்த ஐந்து முக்கியக் குழுக்களை ஃபெடரல் ரிசர்வ் தலைவர் அமைத்துள்ளார்.
இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் மெர்வின் கிங், நோபல் பரிசு பெற்ற தாமஸ் சார்ஜென்ட் மற்றும் வால்மார்ட் முன்னாள் சிஇஓ டக் மெக்மில்லன் போன்ற உலகளாவிய ஆளுமைகளுடன் இணைந்து மூன்று இந்தியர்களும் இந்த சீர்திருத்தக் குழுவில் இடம்பெற்றுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இக் குழுவின் பரிந்துரைகள் மூலம், அமெரிக்கா தனது பல ஆண்டுகால கடுமையான பணவீக்க சவால்களைக் கடந்து, சிறப்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் என்று கெவின் வார்ஷ் தெரிவித்துள்ளார்.