மேற்கு ஆசியா, உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தல்

நார்வே மன்னரிடம் இருந்து விருதைப் பெறும் பிரதமர் மோடி

நார்வே மன்னரிடம் இருந்து விருதைப் பெறும் பிரதமர் மோடி

Updated on
1 min read

ஒஸ்லோ(நார்வே): மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றம் ராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவும் நார்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு பிரச்சினையையும் ராணுவ மோதல் மூலம் மட்டும் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்.

உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய நிறுவனங்களைச் சீர்திருத்துவது அவசியம் என்ற விஷயத்திலும் நாங்கள் உடன்படுகிறோம்.

மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரோடு ஒழிப்பது நமது பகிரப்பட்ட உறுதிப்படாகும். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நார்வே இந்தியாவுக்கு அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.

நான் கடந்த ஆண்டே நார்வே வருவதாக இருந்தேன். ஆனால், பஹல்காம் தாக்குதல் காரணமாக அந்த பயணத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று. அந்த இக்கட்டான நேரத்தில் நார்வே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உறுதியாக நின்று, உண்மையான நட்பை வெளிப்படுத்தியது. இன்று நான் நார்வேக்கு வருகை தரும்போது அந்த ஒற்றுமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா தலைமையிலான இந்தோ - பசுபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இணைய நார்வே முடிவு செய்துள்ளது. இரண்டு முக்கிய கடல்சார் நாடுகளான இந்தியாவும் நார்வேயும் கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, நார்வே தனது உயரிய விருதான ராயல் வார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட் இன் கிராண்ட் கிராஸ் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது. நார்வே மன்னர் ஹரால்டு வி இவ்விருதை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி பெறும் 32வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>நார்வே மன்னரிடம் இருந்து விருதைப் பெறும் பிரதமர் மோடி</p></div>
டெல்லியில் தகிக்கும் வெப்பம் - வட இந்தியாவில் வெப்ப அலை தீவிரம் அடைவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in