

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த ஈரான் மீது அமெரிக்கா - மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தது. இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதிக்கான புரிந்துணர்வு வரைவு ஒப்பந்தம் கடந்த மாதம் 18-ம் தேதி ஏற்பட்டது. 60 நாட்களுக்குள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதி ஒப்பந்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இருதரப்பு இடையே சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் 21-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் மற்றும் கத்தார் பிரதிநிதிகள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதால், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அலி கமேனியின் உடல் வரும் 9-ம் தேதி அடக்கம் செய்யப்படவுள்ளது.
அதன்பின் 11-ம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அல்லது சுவிட்சர்லாந்தின் பர்ஜென்ஸ்டாக் ரிசார்ட் ஆகிய இரு இடங்களில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஈரானின் அணுசக்தி திட்டம், தடைகள் விலக்குவது, ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது, ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு, லெபனானில் சண்டை நிறுத்தத்தைத் தொடர்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.