

இஸ்லாமாபாத்: யாசகம் செய்பவர்கள் வெளிநாடு செல்வதற்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளது. உம்ரா விசாவை தவறாகப் பயன்படுத்துவது பரவலாக உள்ளது. சமீபத்தில், சவுதி அரேபியாவில் இந்த விசாவை யாசகம் கேட்க தவறாக பயன்படுத்தியதாக பல்வேறு வழக்குகள் பதிவாகின.
இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், குடியேற்ற நடைமுறைகளை சீரமைக்க ஒரு குழுவை அமைத்தார்.
இந்நிலையில், யாசகர்களும், முழுமையற்ற ஆவணங்களுடன் பயணம் செய்பவர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.
சட்டவிரோத யாசகம், விசா விதிமீறல்கள் மற்றும் ஆவண மோசடி காரணமாக வெளிநாடுகளில் அவமானத்தை சந்தித்ததைத் தொடர்ந்து, முழுமையற்ற பயண ஆவணங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாட்டினரையும், யாசகர்களையும் வெளிநாடு செல்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டில் பாகிஸ்தான் விமான நிலையங்களில் சந்தேகத்திற்குரிய ஆவணங்களுடன் வந்த 66,000 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல்வேறு விமான நிலையங்களில் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நக்வி, நாட்டின் கண்ணியத்தை காப்பது தனது முன்னுரிமை என்று அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.