

காத்மாண்டு: நேபாள சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் தலைவராக 3-வது முறையாக கே.பி.சர்மா ஒலி தேர்வாகி உள்ளார். நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
இதையடுத்து, சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவரும் பிரதமருமான கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு செப்டம்பர் 9-ம் தேதி கவிழ்ந்தது. இப்போது முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கர்கி தற்காலிக பிரதமராக பொறுப்பு வகிக்கிறார். இதையடுத்து, சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் நிலவியது.
இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் 11-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கட்சியின் 2,260 பொதுக் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்தத் தேர்தலில் இப்போதைய தலைவர் கே.பி.சர்மா ஒலி, 1,663 வாக்குகள் பெற்று 3-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஈஷ்வர் போக்ரெல் 584 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
கட்சியின் பொதுச் செயலாளராக சங்கர் பொகாரே 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒலியின் ஆதரவாளரான இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் சுரேந்திர பாண்டே தோல்வி அடைந்தார். இதுபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட 19 நிர்வாகிகளில் 17 பேர் ஒலியின் ஆதரவாளர்கள் ஆவர்.