

ட்ரம்ப்
வாஷிங்டன்: பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்லாந்து உள்ளது.
இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைப்பது தொடர்பான மசோதாவை அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.யான ராண்டி பைன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசன், கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்பெல்ட்டை சந்தித்து் கிரீன்லாந்து விவகாரம் பற்றி பேசவுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்போது, ‘‘அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து இருப்பதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது’’ என்றார்.