

பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே உள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
நீண்ட காலமாக பகைமை பாராட்டி வரும் இரு நாடுகளுக்கு இடையே, கடந்த 3 தசாப்தங்களில் இல்லாத வகையில் இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறுவது இது 2-வது முறையாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்த 10 நாள் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து இரு நாடுகளும் ஆலோசிக்க உள்ளன. இதுதொடர்பாக லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் கூறுகையில், “அமெரிக்காவுக்கான லெபனான் தூதர் நடா ஹமாதே முவாத் மற்றும் இஸ்ரேல் தூதர் யெச்சியேல் லைட்டர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
ஆக்கிரமிப்பு, இடிப்பு... போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும், எல்லையோர கிராமங்களில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு மற்றும் இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவும் லெபனான் தரப்பில் வலியுறுத்தப்படும்” என்றார். இஸ்ரேலியப் படைகள் லெபனானில் இருந்து முழுமையாக வெளியேறுதல், சிறைபிடிக்கப்பட்ட லெபனான் கைதிகளை விடுவித்தல் மற்றும் எல்லையில் லெபனான் ராணுவத்தை நிலை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளும் இந்த பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சார் பேசுகையில், “லெபனான் அரசுக்கும் எங்களுக்கும் பெரிய அளவில் எல்லை பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆனால், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பே அமைதிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அந்த அமைப்பை நிராயுதபாணியாக்க லெபனான் அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.