

டெல் அவிவ்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று அறிவித்துள்ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறும்போது, “ஈரானின் எந்தவொரு மூத்த தலைவரையோ அல்லது அதிகாரியையோ கொல்லும் அதிகாரத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கியுள்ளார். எந்தவித அனுமதியையும் பெறாமலேயே ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள பிரதமர் நெதன்யாகு எங்களுக்கு அனுமதி தந்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில்
ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துவிட்டார். இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வரலாம்" என்றார்.
ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர்.
மேலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திடீர் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுருவும், உச்சத் தலைவருமான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்சத் தலைவராக காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்ப்பது நடக்கவில்லை.
முன்னதாக ஈரான் மீதான தாக்குல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கச்சா எண்ணெய் போக்குவரத்து ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட போர்க் கப்பல்களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள கரைப் பகுதிகளில் ஈரான் ஏவுகணை தளங்கள் பல உள்ளன. இங்கிருந்துதான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாதாளத்தில்உள்ள இந்த ஏவுகணை கிடங்குகளை குறி வைத்து 2,200 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை அமெரிக்க ராணுவம் வீசியது. இந்த குண்டுகள் பாதாள பகுதிகளை ஊடுருவி தாக்கும் திறன் படைத்தவை. இந்த குண்டுகளை ஈரான் மீது வெற்றிகரமாக வீசியதாக அமெரிக்க ராணுவம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்
ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.