

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல்போர் நடைபெற்றது. தற்போது இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும் ஹார்முஸ் ஜலசந்தியைஈரானும் அமெரிக்காவும் முடக்கி வைத்து உள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் 15 ஏவுகணைகளை வீசியது. மேலும் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் துறைமுக பகுதியில் பணியாற்றிய 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமீரக ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஈரான் வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை நடுவானில் அழித்துவிட்டோம். ஆனால் சில ஏவுகணைகள் எண்ணெய் கிடங்குகளில் விழுந்து தீப்பற்றியது. 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தன.
இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்து உள்ளனர். உள்கட்டமைப்புகள், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்தியா துணை நிற்கும்.
ராஜ்ஜியரீதியிலும் பேச்சுவார்த்தை மூலமும் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஆதரவு அளிக்கும். உலகத்தின் எரிசக்தி தேவை, பிராந்திய அமைதியை கருத்தில் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்க ராணுவத்தின் ஏற்பாட்டின்பேரில் ஐக்கிய அரபு அமீரக துணையுடன் ஹார்முஸ் ஜலசந்தியில் சில சரக்கு கப்பல்கள் கடந்து சென்று உள்ளன. இதன்காரணமாக ஐக்கிய அமீரக துறைமுகத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். அமெரிக்கா அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுப்போம். ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கி வந்த அமெரிக்க போர்க்கப்பல்களை எச்சரிக்கும் வகையில் சில ஏவுகணைகளையும் வீசினோம்” என்று தெரிவித்தன.