ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - அமைதிப் பேச்சு தொடங்குவதில் சிக்கல்

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - அமைதிப் பேச்சு தொடங்குவதில் சிக்கல்
Updated on
1 min read

தெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், இன்று ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்த நீட்டிப்பு குறித்த ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் சண்டையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக இரு நாடுகளும் எச்சரித்துள்ளன.

இந்தச் சூழலில், பிரிட்டிஷ் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம், ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர காவலர் படை (IRGC), இன்று காலை 7:55 மணியளவில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு சரக்கு கப்பலைத் தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவித்தது.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஈரான் ராணுவம், கப்பலுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும் பிரிட்டிஷ் ராணுவம் கூறியது.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்தத் தாக்குதலால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

இரண்டாவதாக ஒரு சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கடலில் நிறுத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்தது. அந்தக் கப்பலுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 19-ல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்​றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்​பட்ட மற்​றொரு ஈரானிய எண்​ணெய் கப்​பலை அமெரிக்க கடற்​படை நேற்று கைப்​பற்​றியது. இதையடுத்து, ஈரானின் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை கைப்​பற்​று​வது போர் நிறுத்த மீறல் ஆகும் என்று அந்த நாட்டு தலை​வர்​கள் குற்​றம் சாட்டி வரு​கின்​றனர்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 8-ம் தேதி இருதரப்​புக்கு இடையே 2 வாரங்​களுக்கு போர் நிறுத்​தம் அமல் செய்யப்பட்​டது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதி​களில் அமெரிக்கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து இஸ்​லா​மா​பாத்​தில் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்​தையை நடத்த ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வருகின்றன. அணு ஆயுதம், ஹார்​முஸ் ஜலசந்தி கட்​டுப்​பாடு, லெப​னான் போர் நிறுத்​தம் உள்​ளிட்ட விவகாரங்களில் இரு தரப்​புக்​கும் இடையே ஒரு​மித்த கருத்து எட்​டப்​பட​வில்​லை. இதனால் 2-ம் சுற்று பேச்​சு​வார்த்தை தள்ளி வைக்​கப்​பட்டு வரு​கிறது கவனிக்கதக்கது.

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் - அமைதிப் பேச்சு தொடங்குவதில் சிக்கல்
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in