

தெஹ்ரான்: ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து விதித்து வரும் தடைகள் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பழையபடி கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஈரானின் மத்திய ராணுவத் தலைமை இன்று (ஏப்ரல் 18) அறிவித்தது.
ஈரானின் அரசு ஊடகமான 'இஸ்லாமியக் குடியரசு ஒலிபரப்பு நிறுவனம்' (IRIB), புனித நபி (ஸல்) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டதாக பகிர்ந்த அறிக்கையில், “அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்களை முறைப்படுத்தப்பட்ட வகையில் செல்ல அனுமதிக்க ஈரான் நல்லெண்ண அடிப்படையில் ஒப்புக்கொண்டது.
துரதிர்ஷ்டவசமாக, வாக்குறுதிகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்ட அமெரிக்கர்கள், தடை என்று சொல்லிக்கொண்டு, தொடர்ந்து கடற்கொள்ளை மற்றும் வழிப்பறிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்த ஜலசந்தி தற்போது ஆயுதப் படைகளின் கடுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஈரானியக் கப்பல்களுக்கு முழுமையான போக்குவரத்துச் சுதந்திரத்தை அமெரிக்கா உறுதி செய்யும் வரை, தற்போதைய நிலைமை தொடரும்” என்று அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.