

டெஹ்ரான்: அமெரிக்காவின் 'சேஃப்சீ டிரான்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான 'சேஃப்சீ விஷ்ணு' என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் இராக்கின் பஸ்ரா துறைமுகம் அருகில் சென்று கொண்டிருந்தது.
மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்ற இந்தக் கப்பல் மீது ஈரான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கப்பல் தீப்பற்றியதில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கப்பலில் இருந்த எஞ்சிய 15 இந்திய ஊழியர்களும் மீட்கப்பட்டதாக பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் இராக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் ஈரான் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. மால்டா கொடியுடன் வந்த இந்தக் கப்பல் கிரீஸ் நாட்டு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.இவ்விரு தாக்குதல்களுக்கும் ஈரான் பொறுப்பேற்றுள்ளது. நீருக்கடியில் செல்லும் டிரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.