

டாக்கா: வங்கதேசத்தில் பிரோஜ்பூர் பகுதியில் 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சுமார் 150-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. சுமார் 25 இந்துக்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் வங்கதேச மாணவர் அமைப்பின் மூத்த தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி மீது கடந்த 12-ம் தேதி டாக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக வங்கதேச சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதை இந்திய பாதுகாப்புப் படைகள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. ஹாடி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 18-ம் தேதி வங்கதேசத்தின் மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி ராஜ்பாரி பகுதியில் இந்து இளைஞர் அம்ரித் மண்டல் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சூழலில் வங்கதேசத்தின் பிரோஜ்பூர் மாவட்டம், தும்ரிதாலா கிராமத்தில் 5 இந்து குடும்பங்களின் வீடுகள் நேற்று நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்டன.
திடீரென தீப்பிடித்து எரிவதைப் பார்த்த 5 குடும்பத்தினரும் வீடுகளை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். ஆனால் வீடுகளின் வெளியே பூட்டு போடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து கதவுகளை உடைத்து 5 குடும்பத்தினரும் உயிர் தப்பினர். எனினும் அவர்களது வீடுகள், உடைமைகள் தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி சந்தேகத்தின்பேரில் 5 பேரை கைது செய்து உள்ளனர்.
தாரிக் ரஹ்மான் வேட்புமனு தாக்கல்: வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி (என்சிபி), ஜமாத்-இ–இஸ்லாமி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும் பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 25ம் தேதி தாய் நாட்டுக்கு திரும்பினார். அவர் சார்பில் டாக்கா 17, போகுரா 6 ஆகிய இரு தொகுதிகளில் நேற்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிஎன்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.