

சியோல்: வடகொரியாவைச் சேர்ந்த 9 பேர் கொண்ட ஒரு குடும்பம் 10 ஆண்டுகள் திட்டமிட்டு, 2 மணி நேரத்தில் தப்பி தென் கொரியா சென்றுள்ளது.
வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் அடக்குமுறை கம்யூனிச ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள மக்களுக்கு போதிய சுதந்திரம் இல்லை. அங்கு வறுமை, பஞ்சம் நிலவுகிறது. அரசியல் ஒடுக்குமுறை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் இல்லாமல் இருப்பதால் இங்குள்ள மக்கள் தென் கொரியாவுக்கு தப்பிச் செல்ல விரும்புகின்றனர்.
வட கொரியாவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, அங்கு வாழ பிடிக்காமல் தென்கொரியாவுக்கு தப்பிச் செல்ல கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்டது. கடல் வழியாக தப்பிச் செல்வதுதான் ஒரே வழி. இதனால் மீனவர்கள் போல் தப்பிச் செல்ல கிம் இல்-ஹியோக் என்பவரின் தந்தை யோசனை கூறினார். இதனால் அவரது குடும்பம் கடற்கரை நகரில் குடியேறியது. அங்கு கிம் இல்-ஹியோக், அவரது சகோதரர் கிம் யி-ஹியோக் ஆகியோர் படகு ஒன்றை வாங்கி மீன்பிடித் தொழிலை கற்றனர். அடிக்கடி கடலுக்கு சென்று அங்கு கடற்படையின் ரோந்து பணி விவரங்களை உளவு பார்த்தனர்.
இவர்களின் திட்டம் நிறைவேறுவதற்குள் கிம் சகோதரர்களின் தந்தை இறந்து விட்டார். கடந்த 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி மஞ்சள் கடலில் லேசான புயல் உருவாகியது. அந்த நேரத்தில் ரோந்து பணி தீவிரமாக இருக்காது. மேலும், கடல் தெளிவு இல்லாமல் மங்கலாக இருப்பதால் ரேடார் கண்காணிப்பில் இருந்தும் எளிதாக தப்பிக்கலாம். கிம் சகோதரர்களின் குடும்பம் இரவு ரோந்து போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து தங்கள் பயணத்தை தொடங்கினர்.
கிம் இல்-ஹியோக்கின் 5 மாதக் கர்ப்பிணி மனைவி உட்பட அந்தக் குழுவிலிருந்த பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் முதலில் கண்ணிவெடிகள் நிறைந்த பகுதியை நடை பயணமாக கடந்து சென்று படகில் ஏறினர். குழந்தைகளை சணல் சாக்குகளுக்குள் மறைத்து வைத்தனர்.
மீன்பிடி படகு மஞ்சள் கடலில் மிகவும் மெதுவாக பயணித்தது. அப்போதுதான் ரேடார் கண்காணிப்பில் கடலில் ஏதோ ஒரு பொருள் மிதப்பது போல் தெரியும். 2 மணி நேரத்துக்குள் அவர்கள் வடகொரிய கடல் எல்லையை கடந்து தென்கொரிய கடல் பகுதிக்குள் நுழைந்தனர். தென் கொரியாவின் யியோன்பியோங் தீவை நெருங்கியதும், அவர்களை அந்நாட்டு கடற்படையினர் மீட்டனர்.
தென்கொரியாவில் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியது. நான்கு மாதங்களுக்குப் பிறகு, சியோலில் கிம் இல்-ஹியோக்கின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு, கிம் இல் -ஹியோக்கின் இளைய சகோதரர் கிம் யி-ஹியோக், ஸ்கூபா டைவிங் விபத்தில் இறந்தார்.
கிம் இல்-ஹியோக் தற்போது தென் கொரியாவில் சமையல் கலைஞராகப் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. இவரது குடும்பம் தற்போது தென்கொரியாவில் சற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறது.