

வாஷிங்டன்: “கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் எனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக கிரீன்லாந்து உள்ளது. இந்நிலையில், ஆர்க்டிக் பகுதியில் அச்சுறுத்தலாக உள்ள சீனா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, எங்களுக்கு கிரீன்லாந்து வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். மேலும், கிரீன்லாந்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கணிசமான தொகை அளிப்பதாகவும் அறிவித்தார். ஆனால், ட்ரம்ப்புக்கு டென்மார்க் பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதலாக வரி விதிக்கப்படும். அந்த கூடுதல் வரி பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும், கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்கும் ‘டீல்’ சுமுகமாக முடியாவிட்டால், ஜூன் 1-ம் தேதி முதல் வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டென்மார்க் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப் அறிவிப்பை தொடர்ந்து நட்பு நாடுகளுடன் இணைந்து கிரீன்லாந்தில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல. எங்கள் நாட்டை நாங்களே நிர்வகித்துக் கொள்வோம்” என்று அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் கூறும்போது, “அதிபர் ட்ரம்ப்பின் முடிவு முழுவதுமாக தவறு. கிரீன்லாந்து விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது டென் மார்க்கும், கிரீன்லாந்தும்தான். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் அச்சுறுத்தல் ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளுக்கும்தான். அதை எதிர்கொள்ள நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்” என்றார்.
பிரான்ஸ் அதிபர் இமானு வேல் மேக்ரான் கூறும்போது, “அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவித மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றார்.
ட்ரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.