ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல் - ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை

ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல் - ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை
Updated on
1 min read

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது.

போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

லெபனானிலும் போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போர் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில் ஞாயிற்றுக்கிழமை அன்று லெபனான் மீது தீவிர தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதை ஈரான் மற்றும் இஸ்ரேல் தரப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தெஹ்ரானில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது. அதே நேரத்தில் தங்கள் நாட்டு பிராந்தியத்தின் மீது ஏமன் ஏவுகணை வீசியதை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: ட்ரம்ப்

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் அமைதி ஒப்பந்தம் மூலம் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் தொடங்கும் என உலக நாடுகளின் எதிர்பார்ப்பு சற்று தேக்கமடைந்துள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 2 டாலர்கள் உயர்ந்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் பிரென்ட் க்ரூட் - 96 டாலர்களாக உள்ளது. இந்த விலை மேலும் உயரும் பட்சத்தில் அதன் தாக்கம் சர்வதேச நாடுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் வெடித்த மோதல் - ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை
பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in