

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து வெளியேற முயன்ற இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த சூழலில் ட்ரம்ப் அதற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என அதில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்தப்பட்ட ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஈரான் துறைமுகத்துக்கு நுழைய முயன்றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்பலுக்கு பிறப்பித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த கப்பலின் இன்ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்கியது. இதில் இந்திய மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறுகையில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது.
இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்கிறது. மீட்கப்பட்ட இந்திய மாலுமிகள் உடனடியாக நாடு திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மாலுமிகளின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.
இந்தியா கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, இப்பகுதியில் போர் பதற்றம் உடனடியாக குறைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்கதூதரை அழைத்து, இந்திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்
அமெரிக்காவுடன் ஈரான் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தம் தொடர்பான வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின் வரைவில், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக எந்த ஓர் உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.
ஈரானின் அடிப்படைக் கொள்கைளுக்கு உட்பட்டே அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான ஈரானின் உரிமை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தக்க வைத்துக்கொள்வது போன்ற விஷயங்கள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் நோக்கில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதையும், ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டாலர் சொத்துகளை விடுவிப்பதையும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிப்பதையும் உள்ளடக்கியுள்ளது.
ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் விற்பனை மீதான தடைகளை நிறுத்திவைப்பது, ஏப்ரல் 13 முதல் அமலில் உள்ள ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முழுமையாக நீக்குவது, போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈரானுக்கு குறைந்தது 300 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவது ஆகியவற்றையும் இது உள்ளடக்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.