

சிட்னி: சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பாராட்டியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் யூத மதக் கொண்டாட்ட நிகழ்வின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 14 அன்று மாலை, யூத மதப் பண்டிகையான ஹனுகா கொண்டாட்ட நிகழ்வின்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
போன்னிரிக் பகுதியில் வசித்துவந்த சாஜித், அவரது மகன் நவீத் அக்ரம் ஆகிய இருவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவரும் பழ வியாபாரியுமான சாஜித், 10 ஆண்டுகளாக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின்போது, அகமது அல் அகமது என்கிற மளிகைக்கடை உரிமையாளர் துணிவுடன் செயல்பட்டு ஒரு பயங்கரவாதியின் கையிலிருந்து துப்பாக்கியைப் பறித்ததால், மேலும் பலர் காப்பாற்றப்பட்டனர். அப்போது அகமது அல் அகமதுவுக்கு குண்டடிபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தனது எக்ஸ் தளத்தில், “அகமது, நீங்கள் தான் ஆஸ்திரேலியாவின் ஹீரோ. போண்டி கடற்கரையில், மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் பெரும் ஆபத்தை கையாண்டீர்கள்.
இப்படிப்பட்ட மிகவும் இக்கட்டான நேரங்களில் தான், ஆஸ்திரேலிய மக்களின் சிறந்த குணங்களை நாம் காண முடிகிறது. ஒவ்வொரு ஆஸ்திரேலியர் சார்பாகவும், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்தோணி அல்பனீஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நமது நாடு துணிச்சலான நாடு. அகமது நமது நாட்டின் சிறந்த பண்புகளைப் பிரதிபலித்துள்ளார். இந்த நாடு பிளவுபடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆனால் பயங்கரவாதிகள் அதைத்தான் விரும்புகிறார்கள். நாம் ஒன்றுபடுவோம், ஒருவரையொருவர் அரவணைப்போம், இதிலிருந்து மீண்டு வருவோம்.” என்றார்.