Published : 06 Jul 2014 04:28 PM
Last Updated : 06 Jul 2014 04:28 PM

மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்: 467 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 467 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கினியா, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் அடுத்த சில மாதங்களில் எபோலா வைரஸ் தாக்குதலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் வரும். பின்னர் தொண்டை, தலை, உடல் வலி, ரத்தத்துடன் கூடிய வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்படும். பிறகு கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். வைரஸ் தாக்குதல் உச்சத்தை எட்டும்போது காது, மூக்கு, வாய் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் இருந்து கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் இதுவரை 467 பேர் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இப்பகுதி முழுவதுமே இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் எந்த அளவுக்கு அதிகமாக பரவும், எப்போது முழுமையாக நீங்கும் என்பதை கணித்துக் கூற முடியாது. ஒரு சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இந்த வைரஸ் தாக்குதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நீடிக்கும்.

இது தொடர்பாக மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள 12 நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சகங்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

1967-ல் காங்கோவில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. அப்போது 1,587 பேர் உயிரிழந்தனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்தனர்.

எபோலா வைரஸுக்கு தடுப்பு மருந்து கிடையாது. நோய் ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி உரிய மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x