

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதி செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் வெளிநாட்டுக்காரர்கள் 4 பேர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
காபூல் விமான நிலையத்தின் அருகே நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் வளாகம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த நாடுகளைச் சேர்ந்த பலர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் வெளிநாட்டுக்காரர்கள் 4 பேர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
காபூல் காவல்துறை தலைவர் ஜாகிர் ஜாகிர் கூறுகையில், “இந்த வளாகத்துக்குள் தீவிரவாதி எப்படி நுழைந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், “வெளிநாட்டு உளவுப் படை தங்கியிருக்கும் வளாகத்தில் நாங்கள் நடத்திய தாக்குதலில் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன” என்று கூறியுள்ளனர்.