Published : 15 May 2023 02:12 PM
Last Updated : 15 May 2023 02:12 PM

தாய்லாந்து தேர்தல் முடிவுகள் வெளியீடு - ராணுவ ஆதரவு கட்சிகளை வீழ்த்திய எதிர்க்கட்சிகள்

பிடா லிம்ஜாரோஎன்ரட்டா

பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு ராணுவத்தினால் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்தின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத் சான் ஈ சா அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். இவரது தலைமையிலான ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மன்னர் முறைக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரதான எதிர்க்கட்சியான ஃபார்வர்டு கட்சியின் தலைவர் பிடா லிம்ஜாரோஎன்ரட்டா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 41 வயது தொழிலதிபரான அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை எண்ணப்பட்ட நிலையில் ராணுவ ஆதரவு கட்சிகளை எதிர்க் கட்சிகள் விழ்த்தியுள்ளன.

500 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சிகளான ஃபார்வர்டு கட்சியும், பியூ தாய் கட்சியும் சுமார் 286 இடங்களை வென்றுள்ளன. இதில் 147 இடங்களை ஃபார்வர்டு கட்சி பெற்றுள்ளது. மேலும், சில கட்சிகளின் ஆதரவுடன் ஃபார்வர்டு கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் பிடா லிம்ஜாரோஎன்ரட்டா பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் தாய்லாந்து ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் வெறும் 15% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஃபார்வர்டு கட்சிக்கு இளைஞர்களிடம் தீவிரமான ஆதரவு இருந்து வந்ததாகவும், அது பொதுத் தேர்தலிலும் எதிரொலித்துள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவை அடுத்து, 9 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ ஆட்சி இல்லாத ஜனநாயக முறையிலான ஆட்சி தாய்லாந்தில் அமையவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x