Published : 05 Oct 2017 09:21 AM
Last Updated : 05 Oct 2017 09:21 AM

பாகிஸ்தானில் 3 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்: தீவிரவாத தாக்குதல் வழக்கில் நடவடிக்கை

பாகிஸ்தானில் நிகழ்ந்த பெஷாவர் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 3 தீவிரவாதிகளுக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெஷாவர் நகரில் ராணுவம் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தில் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 150 பேர் பலியாயினர். இது தொடர்பான வழக்கை விசாரிக்க ஏதுவாக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், 2014 ஜூன் மாதம் பெஷாவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் விமானத்தில் இருந்த ஒரு பெண் உயிரிழந்தார். 3 ஊழியர்கள் காயமடைந்தனர். மேலும் ராணுவ வீரர்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்குகளையும் ராணுவ நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சாஜித், பெஹ்ரம் மற்றும் பசல்-இ-கபார் ஆகிய 3 தீவிரவாதிகளுக்கு கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஒரு சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்கள் மூவரும் பல்வேறு தீவிரவாத தாக்குதல் உட்பட கொடிய குற்றங்களில் ஈடுபட்டது நிரூபணமானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x