முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதாரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்ட இம்ரான் கானிடம் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து ஊழல் தடுப்பு அமைப்பு (என்ஏபி) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் மேலும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 10 நாட்கள் காவலில் வைக்க என்ஏபி அனுமதி கோரியது. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது.

இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி சார்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி எவரையும் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்ய முடியாது. விசாரணைக்கு வந்த ஒருவரை கைது செய்தது தவறானது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அதனால், இம்ரான் கான்கைது சட்டவிரோதமானது. ஊழல் தடுப்புப் பிரிவினர், இம்ரான் கானை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான், உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கானை மூர்க்கமாக நடத்தியதற்கும் கடும் கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.

இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in