

மிலன்: இத்தாலியின் மிலன் நகரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகிலிருந்த ஏராளமான கார்கள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ வடக்கு இத்தாலியின் மிலன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள போர்டா ரோமானா பகுதியின் பையர் லோம்பார்டோ சாலையில் முதலில் ஒரு வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனைத் தொடர்ந்து அருகே இருந்த வாகனங்களிலும் தீ பரவி பெரும் விபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட பலத்த சத்தத்தால் மிலன் நகரமே அதிர்ந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 5 க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற சிறு லாரி ஒன்றில் முதலில் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.