பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கான் வழக்கு விசாரணைக்காக நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் இம்ரான் கானை கைது செய்தனர். அவரை பிடித்து இழுத்துச் சென்று காரில் ஏற்றினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார்.

பதவி இழப்புக்குப் பிறகு இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் தற்போது காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் காவல் துறை தெரிவித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான காதிர் அறக்கட்டளை மூலம் ரூ.5,000 கோடி ஊழல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணையம் மே 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்ததாகவும் இதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் மூர்க்கமாக இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அவரது கைது நடவடிக்கையால் இஸ்லாமாபாத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ- இன்சாப் (பிடிஐ) நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தது. இதனால், நேற்று அங்கு வன்முறை வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் ஆதரவாளர்கள், லாகூரில் உள்ள ராணுவ கமாண்டரின் வீட்டு வளாகத்துக்குள்ளும் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் வளாகத்துக்குள்ளும் நுழைந்தனர். இது பெரும் பதற்றை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in