Published : 20 Sep 2017 10:29 AM
Last Updated : 20 Sep 2017 10:29 AM

வடகொரியா அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு?- விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்தல்

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஐ.நா.பொது சபையின் 72-வது கூட்டம் நியூயார்க் நகரில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியூயார்க் சென்றுள்ளார்.

இந்த கூட்டத்துக்கு நடுவே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டரோ கொனோ ஆகியோரை சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் தனியாக சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வடகொரியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களிடமும் சுஷ்மா ஸ்வராஜ் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் வடகொரியாவின் அணு ஆயுத, ஏவுகணை சோதனையில் பிற நாடுகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஷ்மா வலியுறுத்தினார். இதுதவிர கடல்வழி பாதுகாப்பு மற்றும் இணைப்பு குறித்தும் 3 தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்” என்றார்.

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தலைவராக ஏ.க்யூ. கான் பதவி வகித்த போது அந்த நாட்டிடமிருந்து அணு செறிவூட்டல் தொழில்நுட்பத்தை வடகொரியா ரகசியமாக பெற்றதாக கூறப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அந்த நாட்டுடனான உறவைத்தான் விசாரிக்க வேண்டும் என்று சுஷ்மா மறைமுகமாக வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஐ.நா. பொருளாதார தடை, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா கடந்த 3-ம் தேதி 6-வது முறையாக மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை நடத்தியது. அதன் பிறகு ஜப்பான் வான் பகுதியின் மீது 2- முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்நிலையில் இந்தியா இவ்வாறு வலியுறுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x