Published : 22 Sep 2017 09:40 AM
Last Updated : 22 Sep 2017 09:40 AM
ஐ.நா. சபையின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
அணு ஆயுதங்களை தடை செய்யக் கோரி ஐ.நா. சபையில் கடந்த ஜூலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 122 நாடுகள் ஆதரவு அளித்தன. அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்மானம் ஐ.நா. சபையில் நேற்று முன்தினம் ஒப்பந்தமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 50 நாடுகள் கையெழுத்திட்டன. இவற்றில் எந்தவொரு நாட்டிடமும் அணு ஆயுதங்கள் கிடையாது.
இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது:
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ராணுவம் ஜப்பானில் 2 அணு குண்டுகளை வீசியது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. பனிப்போர் காலத்தைவிட தற்போது அணு ஆயுத போர் அபாயம் அதிகமாக உள்ளது. அணு ஆயுதம் இல்லாத உலகம் உருவாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் முதல்கட்டமாக 50 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT