Published : 26 Apr 2023 05:19 AM
Last Updated : 26 Apr 2023 05:19 AM

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் 73 ஆக உயர்வு - 212 பேர் மாயம்

உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணி; (அடுத்தபடம்) பாதிரியார் பால் மேக்கன்ஜி நெதாங்கே

மாலிண்டி: கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மேக்கன்ஜி நெதாங்கே. இவர் தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார். இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்கள் புதைக்கப்படாமலேயே கிடந்தன.

இது குறித்த தகவலை உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டதும், கென்ய போலீஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நடத்திய விசாரணையில், உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. இவர்களின் உடல்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மீட்டுப் பணி: உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், போலீஸாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து ஷகாகோலா காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளனர். அவர்களை போலீஸார் மீட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. அவர்களுக்கு உணவு கொடுத்தாலும் சாப்பிட மறுக்கின்றனர். முதலுதவி பெற்றுக் கொள்ளவும் மறுக்கிறார்கள். ஒரு பெண் வாயை மூடிக் கொண்டு, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பிடிவாதமாக கூறுகிறார். அந்த அளவுக்கு பாதிரியார் நெதாங்கேவின் போதனைகள் மக்களை மாற்றியுள்ளது.

212 பேர் மாயம்: மாலிண்டி நகரில் 212 பேரை காணவில்லை என கென்ய செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 2 பேரை மட்டும், செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டு குடும்பத்தினரிடம் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கென்யா அதிபர் வில்லியம் ரூடே கூறுகை யில், ‘‘இச்சம்பவம் நாடு முழு வதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கைகளை பின்பற்றும் மத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும். நெதாங்கே போன்ற பாதிரியார்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை. தங்களின் கொடூரமான செயல்களை நிறைவேற்ற தீவிரவாதிகள் மதத்தை பயன்படுத்துகின்றனர். அதே செயலைத்தான், நெதாங்கே போன்ற பாதிரியார்களும் மேற்கொள்கின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

பைபிளில் கல்வி அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் யாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பாதிரியார் நெதாங்கே கடந்த 2017-ம் ஆண்டில் போதனை செய்துள்ளார். இதையடுத்து தீவிரவாத கொள்கைகளை பரப்புவதாக இவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x