Published : 31 Mar 2023 05:10 PM
Last Updated : 31 Mar 2023 05:10 PM

“புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம்; ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்” - ஜெலன்ஸ்கி

கீவ்: "புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது" என்று அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டோர் ரஷ்யப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள தேவாலயம் அருகே 45 அடி நீளத்துக்குச் சவக்குழி தோண்டப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்டிருந்த காட்சி அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் டெக்னாலஜி எனும் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்ந்நிலையில், புச்சான்ஸ்கி மாவட்டத்திலுள்ள புச்சா நகரில் படுகொலை நினைவுநாளை ஒட்டி தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு வீடியோவையும் சிறிய பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "புச்சாவில் நிகழ்த்திய படுகொலைகளுக்கு உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவை மன்னிக்கவே மன்னிக்காது. 33 நாட்கள் அந்த நகரைப் பிடித்துவைத்திருந்த ரஷ்ய படைகள் 1400 பேரை கொலை செய்துள்ளது. அவர்களில் 37 பேர் குழந்தைகள். 175 பேர் வதை கூடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். அந்தப் படுகொலையை நிகழ்த்திய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவர். ரஷ்யா அங்கே நிகழ்த்தியது இன அழிப்பு. ஒரு போர்க்குற்றம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x