Published : 28 Jul 2014 12:15 PM
Last Updated : 28 Jul 2014 12:15 PM

காஸாவில் உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

பாலஸ்தீனத்தின் காஸா மீதான தாக்குதலை மனிதாபிமான அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

ரமலான் விடுமுறையையும் தாண்டி, இஸ்ரேலும் - பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்தை தொடர வேண்டும். இதன் மூலம் 1000-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான காஸாவில் அவசர உதவிகளை பொதுமக்களுக்குச் செய்ய முடியும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பு நாடுகள் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டன. அக்கூட்டத்தில், காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துவது என ஒருமித்த முடிவெடுக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஜோர்டான் இதற்கான பிரகடணத்தை உருவாக்கியுள்ளது. அதில், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 நாட்களாக நடந்து வரும் போரில், பாலஸ்தீனர்கள் 1,030 பேரும், இஸ்ரேலியர்கள் 46 பேரும் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x