இந்திய சிறுமி உயிரிழப்பு - குற்றவாளிக்கு 100 ஆண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய சிறுமி உயிரிழப்பு - குற்றவாளிக்கு 100 ஆண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 வயது சிறுமி உயிரிழப்புக்குக் காரணமான நபருக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையை லூசியாணா நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் லூசியாணா மாகாணம் ஷிரேவ்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் லீ ஸ்மித் (35). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மான்க்ஹவுஸ் ட்ரைவ் என்ற ஓட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது அதே ஓட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவருக்கும், ஸ்மித்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஸ்மித் தன்னிடமிருந்த 9 எம்எம் ரக துப்பாக்கியால் அந்த நபரைச் சுட்டார்.

ஆனால் அந்த துப்பாக்கி குண்டு அந்த ஓட்டலில் வசித்து வந்த 5 வயதான இந்திய வம்சாவளி சிறுமி மியா படேலின் தலையில் பாய்ந்தது. இவரது பெற்றோர் விமல், ஸ்னேகா படேல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவுக்கு வந்த பின்னர் மான்க்ஹவுஸ் ட்ரைவ் ஓட்டலை வாங்கி நடத்தி வந்தனர். ஓட்டலின் கீழ்ப்பகுதியில் அவர்கள் வசித்து வருகின்றனர். துப்பாக்கி குண்டால் காயமடைந்த சிறுமி மியா படேல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் 3 நாட்கள் உயிருக்குப் போராடிய மியா படேல் மார்ச் 21-ம் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக லூசியாணா போலீஸார், வழக்குப் பதிவு செய்து ஸ்மித்தை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜான் டி மோஸ்லி, ஸ்மித்துக்கு 100 ஆண்டு சிறைத்தண்டனையை கடந்த வியாழக் கிழமை வழங்கியுள்ளதாக ஷ்ரேவ்போர்ட் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கருணை காட்டக்கூடாது: குற்றவாளி ஸ்மித்துக்கு பரோல் மற்றும் தண்டனை குறைப்பு என எந்த சலுகையும் இல்லாத 60 ஆண்டு கடுங்காவல்சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது என்று நீதிபதி ஜான் டி மோஸ்லி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in