Last Updated : 04 Sep, 2017 03:59 PM

 

Published : 04 Sep 2017 03:59 PM
Last Updated : 04 Sep 2017 03:59 PM

மியான்மரிலிருந்து 87ஆயிரம் அகதிகள் வெளியேற்றம்: ஐ.நா. தகவல்

மியான்மரில் கடந்த பத்து நாட்களில் 87 ஆயிரம் பேர் வெளியேறி வங்தேசம் சென்றுள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது.

இதுகுறித்து ஐ. நா  இன்று (திங்கட்கிழமை) கூறியதாவது, "கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதியிலிருந்து மியான்மரில் நடந்த வன்முறை சம்பவம் காரணமாக 87 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி அகதிகளாக வங்கதேசம் சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள்.

இன்னும் சுமார் 20 ஆயிரம் பேர் வரை வங்கதேசத்தில் நுழைவதற்காக மியான்மர் எல்லையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீப நாட்களில் வங்கதேசம் தனது எல்லை கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. எனினும் ஐ. நாவின் அறிவுரையை ஏற்று சில அகதிகளுக்கு அனுமதி அளித்து வருகிறது" என்று கூறியுள்ளது.

வன்முறைகளுக்குப் பின்னணி என்ன?

10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மரில் ‘நிறவெறி’ காலகட்டத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இவர்களை வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்று மியான்மர் அரசு கூறிவருகிறது.

2012-ம் ஆண்டு ராக்கைனில் பவுத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனையடுத்தே சர்வதேச நாடுகளின் பார்வை மியான்மர் மீது விழுந்தது.

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் குடிமக்ககளாக அங்கீகரிக்கக் கூடாது என்று பவுத்த தேசியவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x