Published : 22 Mar 2023 06:12 AM
Last Updated : 22 Mar 2023 06:12 AM

இலங்கைக்கு ரூ.24,600 கோடி கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல்

கொழும்பு: கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) கடன் உதவி வழங்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை நான்கு ஆண்டுகால அடிப்படையில் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக தற்போது 333 மில்லியன் டாலர் (ரூ.2,700 கோடி) நிதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வந்த நிலையில், சென்று ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்தது. அதன் விளைவாக, அந்நாடு திவால் நிலைக்கு உள்ளானது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், அத்தியாவசியப் பொருள்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவானது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலைவாசி வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது.

3 பில்லியன் டாலர்...: இந்தியா, சீனா உட்பட அண்டை நாடுகளிடமும் சர்வதேச செலாவணி நிதியத்திடமும் இலங்கை உதவி கோரியது. இந்நிலையில், இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை ஆய்வுக்கு உட்படுத்திய ஐஎம்எஃப், பல்வேறு நிபந்தனைகளுடன் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினாஜார்ஜீவா கூறுகையில், “இலங்கைகடும் பொருளாதார நெருக்கடியையும், சமூக நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடிகளிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க வேண்டுமென்றால், அங்கு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x