

லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனிலுள்ள பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலைத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் சுரங்க ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ரயிலில் மர்ம பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரயிலில் இருந்த பயணிகள் 22 பேர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பு குறித்து லண்டன் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை ஐஎஸ் இயக்கம் அதன் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து பிரதமர் தெரசா மே, "இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். நாங்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை தோற்கடிப்போம்” என்றார்.
சுரங்க ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் குண்டுவெடிப்பு சதி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்க லண்டன் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
லண்டனில் கடந்த மார்ச் முதல் இதுவரை 5 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.