ஈரானில் மாணவிகளுக்கு விஷம் | குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: அயத்துல்லா அலிகாமெனி

அயத்துல்லா அலி காமெனி
அயத்துல்லா அலி காமெனி
Updated on
1 min read

தெஹ்ரான்: பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைத்த விவகாரம் மன்னிக்க முடியாதது என தெரிவித்துள்ள ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலிகாமெனி, வேண்டுமென்றே விஷம் வைக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டதை ஈரான் கல்வி அமைச்சகமும் உறுதி செய்தது. உணவு அல்லது காற்றின் மூலமாக விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு மத அடிப்படைவாதிகளே காரணம் என்றும், மாணவிகள் கல்வி பயில்வதை தடுக்கும் நோக்கில் விஷம் கொடுக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலிகாமெனி, “மாணவிகளுக்கு விஷம் கெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்றே மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இளம்பெண் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் எழுந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in