Published : 04 Mar 2023 06:15 AM
Last Updated : 04 Mar 2023 06:15 AM

ஐ.நா. கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை - நித்தியானந்தாவின் பெண் சீடர் விஜயபிரியா மறுப்பு

ஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா. அலுவல கத்தில் சமூக, பொருளாதார, கலாச்சார குழுக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாமியார் நித்தியானந்தா உருவாக்கி இருப்பதாக கூறப்படும் ‘கைலாசா’ நாட்டின் பிரதிநிதியாக விஜயபிரியா நித்தியானந்தா என்ற பெண் சீடர் உரையாற்றியது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஹை கமிஷனர் அலுவலக செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:

‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’ என்ற பெயரில் பிரதிநிதிகள் பங்கேற்று ஐ.நா. கூட்டத்தில் பேசிய கருத்துகள் பொருத்தமற்றவை. கொடுக்கப்பட்ட தலைப்புக்கு பொருத்தமாக அவர்கள் எந்தக் கருத்தையும் பேசவில்லை. அத்துடன், அந்தக் கருத்துகள் ஐ.நா. இறுதி வரைவு அறிக்கையிலும் இடம்பெறாது. ஐ.நா. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க யார் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு ஹை கமிஷனர் அலுவலக செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகக் கூறினார்.

‘கைலாசா’ விளக்கம்: பெண் சீடர் விஜயபிரியா பேசும்போது, ‘‘பகவான் நித்தியானந்தா பிறந்த இந்தியாவில் இந்து விரோத சக்திகளால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். இந்தியா மீது அவர்மிகவும் மதிப்பு வைத்துள்ளார். இந்தியா அவரது குருபீடமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராகநான் எதுவும் பேசவில்லை. என்னுடைய பேச்சு.உள்நோக்கத்துடன் திரித்து கூறப்படுகிறது. இந்து விரோத சக்திகள் திட்டமிட்டு திரித்துகூறுகின்றன’’ என்று கூறியுள்ளார்.

பெண் சீடர் விஜயபிரியா அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்தவர். ஆங்கிலம், பிரெஞ்ச் உட்பட 4 மொழிகள் தெரிந்தவர். கனடாவின் மனிடோபா பல்கலை.யில் 2014-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x