பள்ளி செல்வதை தடுக்க சிறுமிகளுக்கு விஷம்  - ஈரானில் நடக்கும் கொடுமை

பள்ளி செல்வதை தடுக்க சிறுமிகளுக்கு விஷம்  - ஈரானில் நடக்கும் கொடுமை
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன.

ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினிஎன்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி அவரை கைது செய்த போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்கு தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து வரும் ஈரானில் தற்போது மிக மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் உடலில் விஷம் கலந்து இருந்தது தெரிந்தது. மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ள தகவலை ஈரான் கல்வித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

சிறுமிகள் பள்ளிக்குச் செல்வ தைத் தடுக்க அந்நாட்டைச் சேர்ந்த மதவாதிகள் இதுபோன்ற செயலை செய்து வருவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in