Published : 12 Sep 2017 09:28 AM
Last Updated : 12 Sep 2017 09:28 AM
ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுடன் சண்டை நிறுத்தத்தை ஏற்கமாட்டோம், அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது.
மியான்மரில் பெரும்பான்மை பவுத்தர்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்துள்ளது. இதன்காரணமாக சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அண்டைநாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி ‘ஆரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி’ என்ற கிளர்ச்சிப் படை மியான்மர் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகிறது. அந்த கிளர்ச்சிப் படை அண்மையில் சண்டை நிறுத்தத்தை அறிவித்தது. இதேபோல ராணுவமும் சண்டையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
ஆனால் இந்த கோரிக்கையை மியான்மர் அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளர்ச்சியாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படாது. கிளர்ச்சிப் படைக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்மடைந்துள்ளனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அனுப்புவது மரணத்துக்கு சமமானது. இந்த நடவடிக்கையை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT