Published : 18 Feb 2023 09:53 AM
Last Updated : 18 Feb 2023 09:53 AM

பூகம்ப மீட்பு பணியை முடித்து நாடு திரும்பியது தேசிய பேரிடர் மீட்புப் படை - துருக்கியில் 11 நாட்களுக்குப் பிறகு 4 பேர் மீட்பு

புதுடெல்லி: கடந்த 6-ம் தேதி துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பம் ஏற்பட்ட பிறகு இந்தியாவில் இருந்து 7 சிறப்பு விமானங்களில் மீட்புக் குழுவினர் துருக்கி சென்றனர். அங்கு பல்வேறு மீட்புப் பணிகள், நிவாரண உதவிகளை வழங்கினர்.

இதில் முதலில் துருக்கி சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் 47 பேர் அடங்கிய குழுவினர் நேற்று இந்தியா திரும்பினர். டெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் தரையிறங்கிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவுடன் சென்றிருந்த ராம்போ, ஹனிஆகிய மோப்ப நாய்களும் இந்தியாவுக்கு திரும்பின. இரு மோப்ப நாய்களும் துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பலரைஅடையாளம் காட்டின. இதன்காரணமாக இந்திய மோப்ப நாய்கள், துருக்கி நாளிதழ்களில் நாள்தோறும் பிரதான இடத்தை பிடித்தன. துருக்கியின் ஹதே நகரில் இந்திய ராணுவம் மருத்துவ மனையை அமைத்து பூகம்பத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் பல்வேறு இந்திய குழுக்கள் துருக்கியில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெறுவதால் அந்த நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. எனினும் ஐ.நா. அமைதிப்படை சார்பில் இந்திய ராணுவ வீரர்கள் சிரியாவில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஐ.நா. அமைதிப்படை அதிகாரிகள் கூறும்போது, “நேபாளத்தை சேர்ந்த ராணுவ மேஜர் நிர்மல் குமார் தலைமையில் 415 ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் சிரியாவில் முகாமிட்டுள்ளனர். இதில் 200 பேர் இந்திய வீரர்கள்ஆவர். இந்தியா உட்பட பல்வேறுநாடுகளில் இருந்து சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தனர்.

துருக்கி பூகம்பத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்துள்ளன. இந்தகட்டிட இடிபாடுகளில் இன்னமும் பலர் சிக்கியுள்ளனர். 11 நாட்களுக்குப் பிறகு துருக்கியின் அன்டாக்யா பகுதியில் 14 வயது சிறுவன் உஸ்மான் நேற்று முன்தினம் மீட்கப்பட்டான். அதே பகுதியில் மெஹமத்(26), முஸ்தபா (33) என்ற 2 இளைஞர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர். குடிநீர், உணவு இன்றி பலவீனமான நிலையில் இருந்த 3 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துருக்கியின் கரம்மான்மராஸ் பகுதியில் நேற்று முன்தினம் 17 வயது சிறுமி அலினா உயிருடன் மீட்கப்பட்டார். மிகவும் மோசமான நிலையில் இருந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x