பூகம்பம் | துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு 8,300 ஆக அதிகரிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அங்காரா - டமஸ்கஸ் : சிரியா - துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,364 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்க பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ”இது காலத்திற்கு எதிரான ஓட்டம். நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு எங்களது மருத்துவக் குழுவை நாங்கள் அனுப்பி இருக்கிறோம். நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா - துருக்கியில் 8,364 பேர் பலியாகி உள்ளனர். இதில் துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் 2,470 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், நிலநடுக்கத்திற்கு 20,000பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்தினால் உறவுகளை இழந்த ஒருவர் கூறும்போது, “அந்த இடிபாடுகளில் எனது சகோதரனையும், அவரது குழந்தையையும் நாங்கள் இழந்தோம். நிலநடுக்கத்தினால் பல குடும்பங்கள் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளன. நேற்று ஒரு குழந்தை மட்டும் மீட்கப்பட்டது. அந்த குழந்தையின் தாய் உட்பட பலர் இறந்துவிட்டனர். இப்பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. கடும் பனி இங்கு நிலவுகிறது” என்றார். இந்த நிலையில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களுக்கு 3 மாதக்கால அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in