

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிராக எழுப்பப்பட்ட பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக ஸ்வீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 7 ஆண்டுகால சட்ட இழுபறி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
45 வயதாகும் அசாஞ்சே 2012-ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வருகிறார். அதாவது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் தன்னை ஸ்வீடனுக்கு நாடுகடத்தும் முயற்சியைத் தடுக்க அவர் ஈக்வடார் தூதரகத்தைத் தஞ்சமடைந்தார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல முக்கிய ரகசிய ஆவணங்களை அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்நிலையில் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டை தொடர்ந்து அசாஞ்சே மறுத்து வந்தார். தற்போது ஸ்வீடன் இந்த விசாரணையைக் கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.