முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உடல் அடக்கம்

மறைந்த பெனடிக்ட் | கோப்புப்படம்
மறைந்த பெனடிக்ட் | கோப்புப்படம்
Updated on
1 min read

வாட்டிகன் சிட்டி: முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப் பிறகு போப் ஆண்டவராக பதவியேற்றவர் பதினாறாம் பெனடிக்ட். ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் 1927-ல் பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர்.

இந்நிலையில் போப் ஆக இருந்த இரண்டாம் ஜான்பால் மறைவை தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி போப் ஆண்டவராக ஆக பொறுப்பேற்றார். இதையடுத்து பெனடிக்ட் என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டார்.

சுமார் 8 ஆண்டுகள் போப் ஆக இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு காரணமாக தனது கடந்த 2013-ம் ஆண்டு தனது பொறுப்பிலிருந்து விலகினார். பதவி விலகிய பிறகு வாட்டிகன் வளாகத்திலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் 95 வயதான அவருக்கு அண்மைக் காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 31-ம் தேதி பெனடிக்ட் காலமானார்.

இவரது உடல் வாட்டிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் கடந்த திங்கட்கிழமை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் 3 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தற்போதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் அடக்க திருப்பலிக்கு பிறகு பெனடிக்ட் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் பொதுமக்கள் தவிர, கர்தினால்கள், ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in