'சீரியல் கில்லர்' சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

சார்லஸ் சோப்ராஜ்
சார்லஸ் சோப்ராஜ்
Updated on
1 min read

காத்மாண்டு: சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். அவர் விடுதலையாகியுள்ள நிலையில், அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியனவற்றை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சார்லஸ் சோப்ராஜிடம் பல்வேறு நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. அவருடைய உண்மையான பாஸ்போர்ட் எதுவென்பது தெரிந்த பின்னர் அவரை பிரான்ஸுக்கு நாடுகடத்த முடியும். முன்னதாக, சார்லஸ் சோப்ராஜ் தன் முதுமையைக் காரணம் காட்டி விடுதலை கோரியிருந்தார். இந்நிலையில், நேபாள் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்ததோடு நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த சார்லஸ் சோப்ராஜ்? - சார்லஸ் குருமுக் சோப்ராஜ் ஹாட்சந்த் பவ்னானி என்பதுதான் இவரது முழுப்பெயர். பிரான்ஸ் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த வியட்நாமில் பிறந்தவர். இவரது தந்தை பவ்னானி, இந்தியர். தாய் டிரான் லோவாங் புன், வியட்நாமிய பெண். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இவர் ஹிப்பி எனப்படும் நாடோடி கலாச்சாரத்தில் திளைத்துள்ளார். அதிகமாக பயணங்களை மேற்கொண்டார். பயணங்களின்போது தன்னுடன் பழகியவர்களை அவர் விஷம் கொடுத்து கொலை செய்தார். ’பிகினி கில்லர்’ என்ற பட்டப்பெயரும் இவருக்கு ஏற்பட்டது. இவர் மீதுள்ள கொலைக் குற்றங்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்தாலும் கூட 12 கொலைகள்தான் இவர் செய்ததாக நிரூபணமாகின.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in