Published : 02 Dec 2022 09:22 AM
Last Updated : 02 Dec 2022 09:22 AM

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய தூதர் பேட்டி

ருச்சிரா காம்போஜ்

நியூயார்க்: "ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை" என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று வியாழக்கிழமை இந்தியா வசம் வந்தது.
இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த காம்போஜ், "ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. நாங்கள் எப்போதுமே ஜனநாயகமாகத் தான் இருந்துள்ளோம். அண்மைக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் ஜனநாயகத்தின் 4 தூண்களும் வலுவாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல எங்கள் நாட்டில் சமூக வலைதளம் கூட சுதந்திரமாக இருக்கிறது. அதனால் இந்தியா தான் உலகிலேயே வலுவான ஜனநாயகம்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை நடத்துகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கின்றது. நாங்கள் தொடர்ச்சியாக மாற்றங்கள், ஏற்றங்களைக் கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது" என்றார்.

15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிசம்பர் மாதத்திற்கான தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும். பல்வேறு பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும். இந்த மாதத்துடன் இந்தியாவின் இரண்டு ஆண்டுகால ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரந்திநிதித்துவம் நிறைவு பெறுகிறது. ருச்சிரா காம்போஜ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் முதல் பெண் பிரதிநிதி என்பது குற்ப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x