கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

Published on

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 36,061 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகளால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதையடுத்து சீனாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகும்படி மக்கள் கோரிக்கை விடுத்ததால், கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த சீன அரசு முடிவு செய்தது. காங்சோ, ஷிஜியாஸ்ஹாங், செங்டு உட்பட பல முக்கிய நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் ஷாங்காய் நகரில் ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜியாங் கடந்த புதன்கிழமை இறந்தார். இவரது இறுதிச் சடங்குக்கு சீனா தயாராகி வருகிறது. இதனால் போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ட்விட்டர் போன்ற வெளிநாட்டு சமூக ஊடகங்கள் மூலம், போராட்டம் குறித்த தகவல்களை மக்கள் பரப்புகின்றனரா என சாலையில் செல்வோரிடம் போலீஸார் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in