Published : 30 Nov 2022 05:14 AM
Last Updated : 30 Nov 2022 05:14 AM

சீன அரசுக்கு எதிராக டேட்டிங் செயலிகள், டெலிகிராம் மூலம் தகவல் பரப்பும் போராட்டக்காரர்கள்

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

பெய்ஜிங்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள் டேட்டிங் செயலி, டெலிகிராம் மூலம் தகவல் பரப்புகின்றனர்.

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊரடங்கு காரணமாகத்தான், உரும்கி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது, 10 பேர் வெளியேற முடியாமல் இறந்தனர் என சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. இது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க சீன அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது. சென்சார்கள் மூலம் மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்களை அரசு அழித்து வருகிறது.

இதனால் சீன சமூக ஊடகங்கள் மட்டும் அல்லாது, சீனாவில் தடை செய்யப்பட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சீன போராட்டம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் போராட்டம் குறித்து சீன ஊடகங்கள் மற்றும் சீன அரசு எந்த தகவலும் வெளியிடவில்லை.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறையிடம் கேட்டபோது, ‘‘சட்ட விதிமுறைகளை பின்பற்றும் நாடுசீனா. இங்கு மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்’’ என கூறியது.

சீனாவின் கிரேட் ஃபயர்வால் சென்சாரில் இருந்து தப்பிக்க, ஷாங்காய் மற்றும் செங்டு நகரங்களில் விபிஎன் மென்பொருள், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தகவல் பரப்புகின்றனர்.

இதனால், சோதனையில் ஈடுபடும் போலீஸார், போராட்டக்காரர்களின் செல்போன்களை வாங்கி மேலே கூறப்பட்ட சமூக ஊடகங்களின் செயலிகளை பயன்படுத்துகின்றனரா என ஆய்வு செய்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x