

உலகை மாற்றிய படங்கள் என்ற தலைப்பில் டைம் பத்திரிகை வெளியிட்ட உலக வரலாற்றை புரட்டிப் போட்ட மிக்க 100 புகைப்படங்களில் மகாத்மா காந்தி ராட்டை சக்கரத்துடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், 1946-ல் இந்திய தலைவர்கள் பற்றிய கட்டுரைக்காக மார்கரேட் பருக்கே என்பவர் இந்தப் புகைப் படத்தை படம்பிடித்திருந்தார்.
‘‘காந்தியின் சக்தி வாய்ந்த அடையாளமாக ராட்டை சக்கரம் உள்ளது. அந்தச் சக்கரத்தை அவர் சுழற்றும்படி எடுக்கப்பட்ட இந்தப் படம் எப்போதும் நீடித்து நிற்கும். வெறும் ராட்டையை சுழற்றியபடி இந்திய துணைக் கண்டத்தில் அமைதியை நிலைநாட்டிய மகான் அவர்’’ என டைம் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
கடந்த 1820 முதல் 2015-ம் ஆண்டு வரையில் வரலாற்றை புரட்டிப் போட்ட 100 மிக முக்கியமான புகைப்படங்களை டைம் பத்திரிகை சேகரித்து வைத்துள்ளது. சூடானில் 1993-ல் பஞ்சம் ஏற்பட்டபோது மக்களின் அவலநிலையை கண் முன்னே நிறுத்தும் புகைப்படமும், 2001-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருவர் கீழே குதித்த புகைப்படமும் இதில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. மேலும் ஒசாமாவை கொல்வதற்காக நடந்த ரகசிய நடவடிக்கையின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது குழுவினரும் அறையில் அமர்ந்து நிலைமையை கவனித்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.