Published : 26 Oct 2022 02:32 PM
Last Updated : 26 Oct 2022 02:32 PM

தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது: அமெரிக்கா பாராட்டு

கோப்புப் படம்

வாஷிங்டன்: கரோனா காலத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜா பேசும்போது, “ இந்தியா தனது மிகச் சிறப்பான உற்பத்தி திறனால் தடுப்பூசிகளை அதிக அளவு ஏற்றுமதி செய்தது. உலக நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை மிக முக்கியமானதாக பார்க்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சியால் கோவாக்ஸ் திட்டம் மூலம் சுமார் 100 நாடுகள் வரை தடுப்பூசியை இலவசமாக பெற்றன. நாங்கள் தொடர்ந்து தடுப்பூசியை தானமாக அளித்து வருகிறோம். தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நாடுதான் அமெரிக்கா” என்று தெரிவித்தார்.

2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியது.

இதற்கிடையே கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது உலக அளவில் பெரும் சவாலாக இருந்தது. பல்வேறு நாடுகளுக்கும் தொலைதூர பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தடுப்பூசியை அனுப்புவதும் சவாலாக இருந்தது. எனினும் அறிவியல்பூர்வமான நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக இவை எல்லாம் சாத்தியமானது. இந்தக் காலக்கட்டத்தில் கரோனா தடுப்பூசியை உலக அளவில் கொண்டு செல்வதற்கு இந்தியாவின் உற்பத்தி திறன் சிறப்பாக கை கொடுத்தது. இந்தச் சேவைக்காக இந்தியா உலக நாடுகளின் பாராட்டை அவ்வப்போது பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்கா இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x